கறுப்பி

பிப்ரவரி 23, 2005

சின்னதேவதை

Filed under: Uncategorized — suya @ 6:37 முப

சோமரண்ட திசநாயகாவின் சின்னதேவதை மே மாதம் கனடாவில் திரையிடப்பட்டது. இவரின் “சரோஜா” திரைப்படம் உலகளாவிய அளவில் பல விருதுகளைப் பெற்றது எல்லோரும் அறிந்ததே. அதே போல் சின்னதேவதையும் பல நாடுகளில் திரைப்படவிழாக்களில் பரிசில்களை வென்றுள்ளது என்பது எமக்குப் பெருமையே.
1983ம் ஆண்டு 13 சிங்கள இராணுவம் கொலைசெய்யப்பட்ட போது தோன்றிய இனப்படுகொலைகள் பற்றிய ஒரு சில வரிகளுடன் திரைப்படம் ஆரம்பமானது.
பணக்காறக் குடும்பத்தில் பிறந்த சம்பத் எனும் 10 வயதுச் சிங்களச் சிறுவன், சிறுவயதிலிருந்தே பெற்றோரின் கவனிப்பின்மை, அவர்களுக்கிடையிலான வாக்குவாதம் போன்றவற்றை நேரடியாகப் பார்த்து வளர்ந்ததால் மனநிலைபாதிக்கப்பட்டவனாய் வாய் பேசமுடியாத நிலையில், அதை வெளிக்காட்டும் முயற்சியில் பொருட்களைப் போட்டு உடைக்கும் மனவக்கிரம் கொண்டவனாய் இருக்கின்றான். தாம்பத்திய உறவின் சிக்கல் அவனது தாய் வேறு ஒருவனுடன் வீட்டை விட்டு வெளியேற, பாசம் பற்றிய குறைந்த பட்ச அறிவும் இல்லாத பணக்காறத் தந்தை பாசத்தைத் தவிர அனைத்தையும் கொடுத்து அவனை வளர்க்கின்றார்.
சம்பத்தின் வீட்டில் பலவருடங்களாக வேலு எனும் தமிழன் ஒருவன் வேலைபார்த்து வருகின்றான். பணக்கஷ்டம் காரணமாகத் தனது மகளான சத்யாவைத் தன்னுடன் அழைத்து வந்து சின்ன சின்ன வேலைகளைக் கற்றுக் கொடுக்கின்றான். பெரிய கண்களும் நீண்ட முடியும் அழகான சிரிப்புமாய் தனது குறும்பால் பார்வையாளர்களின் மனதை கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் சத்யா சம்பத்தின் மனதிலும் இடம் பிடிக்க, சம்பத்திடம் மாற்றங்கள் தோன்றிக் கடைசியில் அவன் சத்யாவிடம் சரளமாகத் தமிழ் கதைக்க கற்றுக்கொண்டு விடுகின்றான். தனது மகன் தாய் மொழியான சிங்களத்தை விடுத்து வேலைக்காறியுடன் சேர்ந்து கொண்டு தமிழ் கதைக்கின்றானே என்று முதலில் அவனது தந்தை சங்கடப் பட்டாலும் சத்யாவின் நட்புத்தான் அவனுக்குத் தகுந்த மருந்து என்ற வைத்தியரின் ஆலோசனையை அவரால் புறக்கணிக்க முடியவில்லை.

இதனால் வேலைக்காறி என்று முதலில் ஒதுக்கி வைத்த சத்யாவிலும் அவரிற்கு அன்பு எழத் தொடகுகின்றது. சத்யாவுடன் சேரந்து கொண்டு சாப்பிடுவது படிப்பது விளையாடுவது என்று சம்பத் முற்றுமுழுதாக தேறிவிட
83ம் ஆண்டுக் கலவரம் பல அப்பாவி மக்களைப் பலி கொள்ள அதில் வேலைகாறன் வேலும் உயிரை விடுகின்றான். சத்யாவை சம்பத்தின் குடும்பம் பாதுகாத்தாலும் சிங்களவரும் தமிழரும் சேர்ந்து வாழும் காலம் வரட்டும் அதன் பின்னர் எனது மகளை அழைத்து வருகின்றேன் என்று கூறி சத்யாவின் தாயார் அவளை அழைத்துச் சொல்ல, கலங்கிய கண்களுடன் சம்பதிற்குப் பிடித்த தனது “சின்னதேவதை”எனும் கதைப்புத்தகத்தை அவனுக்குப் பரிசளித்து விட்டு சத்யா போகின்றாள். சத்யாவின் பிரிவைத் தாங்காது சம்பத் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடுகின்றான்.
திரையில் அடிக்கடி வந்து போகும் சின்ன தேவதை எனும் பாடல் மனதை நிறைக்கின்றது.
இந்திய இயக்குனர்களால் சிதைந்து கொண்டிருக்கும் ஈழப்போராட்டம் அதன் பணம் பண்ணும் வித்தையும் ஒரு சிங்கள இயக்குனரால் காக்கப் பட்டிருக்கின்றது.
எமது நாட்டுக்கலவரத்தை துப்பாக்கி இரத்தம் கொண்டு வக்கிரப்படுத்தாலும் சிந்தனை அற்ற மானிட சமூகத்தின் கேவலத்தை சிறுவர்களின் மனஉளச்சல்களை மையமாகக் கொண்டு இயக்குனர் படைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.
“சின்னதேவதை” சிங்களப் படம் எனினும் பாதிப்பகுதி தமிழிலேயே நகர்கின்றது.
எமது நாட்டைச் சேர்ந்த ஒருவர் தரமான ஒரு திரைப்படத்தை எடுத்துப் பல விருதுகளைப் பெற்றிருந்த போதும் சிங்களத் திரைப்படம் என்ற காரணத்தாலோ என்னவோ தரமற்ற தமிழ்த் திரைப்படத்திற்குக் கிடைக்கும் வரவேற்புக் கூட இத்திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. வேதனையான விடையம்.
நடித்தவர்கள் எல்லோரும் அபாரம் . சத்யாவாக நடித்த நித்யவாணி கந்தசாமி தனது சிறந்த நடிப்பிற்காக விருதும் பெற்றுள்ளார்

« முன்னைய பக்கம்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.